|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 March, 2011

ஜாதிக்கு போடும் ஓட்டு...ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு...

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, "ஜாதிக்காரர்' என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும் நிரந்தர முத்திரை. ஒரு தொகுதியில் எண்ணிக்கையில் குறைவாகவுள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எல்லாத் தகுதியும் இருந்தாலும் "சீட்' கிடைக்காமல் போக அடிப்படையும் இதுவே. கட்சிக்காக மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்தாலும் அதிகபட்சமாய் கட்சிப் பதவி அல்லது உள்ளாட்சிப் பதவிகளோடு அவர்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காகவும், மக்களுக்காகவும் (!?) உழைப்பதில் சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றனர். பல்வேறு திறமைகள் இருந்தும் "ஜாதி அரசியலை' தாண்ட முடியாமல், இளைஞர்கள் அரசியலை வெறுக்கின்றனர்.

பல்வேறு ஜாதிகளிலும், கல்வியறிவு, அரசியல் அறிவு, சமூக அக்கறை என எல்லாத்திறமைகளையும் கொண்ட நேர்மையான கட்சி நிர்வாகி ஒருவர் இருந்தாலும், அவரை தேர்தல் களத்தில் நிறுத்திப் பார்க்கும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. இந்த விஷயத்தில் திராவிடக்கட்சிகள் வழிகாட்டுகின்றன; தேசியக் கட்சிகள் பின்பற்றுகின்றன. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் ஓட்டுப் போட்டதால்,ஜாதியின் வேட்பாளரை கட்சிகள் தேர்வு செய்கின்றனவா, ஜாதி வேட்பாளரை முன் நிறுத்துவதால் அவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்பது ஆழமாய் ஆராய வேண்டிய விஷயம். சில ஆண்டுகளில் நடந்துள்ள தேர்தல் முடிவுகளை அலசி, ஆராய்ந்து பார்த்தால் ஒரே ஒரு விஷயம் மட்டும் புலப்படுகிறது.

கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளில், ஜாதி என்கிற மாயை இன்னும் அரசியலில் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் இதன் ஆதிக்கம் குறைந்து, மறைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நகர மயமாதலில், எல்லா மக்களும் எல்லா இடங்களிலும் கலந்து வாழ்வதைத்தவிர வேறு வழியில்லை என்றாகி விட்டது. நகரங்களில் உள்ள தொகுதிகளில் ஜாதி ஓட்டுக்களைக் கணக்கெடுப்பது, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பது போன்றது. நகர மக்களைப் பொறுத்தவரை, விலைவாசி, குடிநீர், மின் தடை என அன்றாடப் பிரச்னைகளுக்கும், உள்ளூரில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகளுக்குளே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓட்டுக்களைப் பதிவு செய்கின்றனர்.

இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு, இந்த தேர்தலிலாவது ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல், கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக உழைக்கத் தயாராயிருப்பவர்களை வேட்பாளராக அறிவிக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். குறைந்தபட்சமாக, இந்த ஒரு மாற்றத்தையாவது கொண்டு வருகிற தேர்தலாக இது அமைந்தால், அதுவே மக்களுக்குக் கிடைக்கிற முதல் வெற்றி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...