|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2011

நம் சினிமா மழுங்கி போய் கிடக்கிறது தங்கர்பச்சான்.


யார் மீதுதான் உங்களுக்கு கோபம்? நல்ல சினிமாக்களும் வருகிறதே?    

சிற்பம், இசை, சினிமா என எல்லாமே வாழ்வின் பாதிப்புதான். ஆனால் நம் சினிமாக்களில் எந்த மக்களின் வலி, வாழ்வு இருக்கிறது.  ÷ஒரே கதைதான். அது என்னவாக இருந்தாலும் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதுதான் நம் சினிமாக்களின் பாடுபொருள். விதை நெல்லை விற்று வயிறு நிரப்பும் விவசாயி. கஞ்சி தொட்டி திறக்கப்படாதா? என காத்திருக்கும் நெசவாளி என யாருடைய பதிவு இங்கு இருக்கிறது? குப்பை சினிமாக்களுக்கே இங்கு முதலிடம். நல்ல சினிமாக்களுக்கு தியேட்டர் இல்லை. விவசாயி போல, நெசவாளி போல நல்ல படைப்பாளியும் திணறுகிறான்.  52 ஆண்டுகளாக ஈழத்தில் ஒரு போராட்டம் நடக்கிறது. அது சார்ந்த ஒரு பதிவு நம்மிடம் இருக்கிறதா? ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் யூத இனத்தின் அழிவை "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற பெயரில் படமாக எடுத்தார். அப்போதுதான் மீதம் இருந்த யூதர்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பின் பெரிய மாற்றமே அங்கு வந்தது. ஆனால் இங்கு போராட்ட குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கிறது. உலக நாடுகளில் நம் உறவுகள் பஞ்சம் பிழைப்பது பற்றி யாருக்கு கவலை இருக்கிறது. ஆனால் காசு வைத்திருக்கும் உலகத் தமிழனை தேடி வாரத்துக்கு ஒரு சினிமா வெளியாகிறது. ஈழத்தமிழனின் வாழ்க்கையை ஒரு சினிமாவில் பதிவு செய்திருந்தால் நம் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. ஆனால் நாம் என்ன செய்தோம் வெறும் பொழுதுபோக்கு குப்பைகளை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். சிறந்த நடிகர்களை வைத்து நாம் என்ன செய்வது? ""எம் இனத்தின் அழிப்பை பற்றி ஒரு சினிமா இருக்கா'' என கேட்க வரும் தலைமுறைக்கு என்ன பதில் இருக்கிறது?    

 மனதில் உள்ளதை பளிச்சென போட்டு உடைப்பதால் பல பேரோட பொல்லாப்புக்கும் ஆளாகின்றீர்களே?  

 நல்லவர், வல்லவர் என ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிக் கொள்கிற எத்தனையோ பேட்டிகளைப் படிக்கிறேன். வெளி நாகரிகத்துக்காக அவர்கள் அப்படி பேசினாலும், உண்மை என்னவென்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும். பந்தி வைக்கிற இடத்தில் நான் எதையும் பதுக்கி வைக்க கூடாது என நினைக்கிறேன்.  
 
 தமிழ் சினிமாவின் சமீபத்திய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?   

 பயமாக இருக்கிறது. ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து கற்பனைகளை மட்டுமே மனசு முழுவதும் நிரப்பி, கோடம்பாக்கத்தில் அலைகிறவர்களை நினைத்து பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்கிற மாதிரியான நிலை இனி தமிழ் சினிமாவில் இல்லை. தமிழ் சினிமாவை நிறைய பேர் ஆக்கிரமித்து விட்டார்கள். கற்பனைகளுக்கு இனி இடம் இல்லை. காசு இருந்தால் பார்க்கலாம் என சொல்லும் நிலை வந்திருக்கிறது. அத்தனை படைப்பாளிகளும் அவசரமாக கூடி பேச வேண்டிய தருணம் இது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...