|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2011

பா.ம.க.,வின் சுயலாபக் கணக்கு !

சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அணியில் போட்டியிட்டு படுதோல்வி கண்டதால், அந்த அணியிலிருந்து விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடி முடிவு எடுத்துள்ளது.பொதுக்குழுவில், கட்சிப் பிரமுகர்கள் தி.மு.க., வை கடுமையாக விமர்சித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மட்டும், தி.மு.க.,வை விட்டு வெளியேறும் முடிவை பொறுமையாக எடுக்க விரும்பினார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் ஆதரவாளர்கள்,"தி.மு.க., கூட்டணி தேவையில்லை' என்ற முடிவை, உடனடியாக எடுக்க உறுதுணையாக இருந்தனர்.

அவர்கள் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடித்தால், மீண்டும் மோசமான தோல்வியை நாம் சந்திக்க நேரிடும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், வேலு போன்றவர்கள் நமக்கு பச்சைத் துரோகம் செய்து, நம்மை தோற்கடித்தனர். இப்போது தி.மு.க.,வின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தோல்வி அடைந்தால், தொடர் தோல்வி மூலம் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், எந்த வகையிலும் பலன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் ஒற்றை எம்.பி.,யாக இருக்கிற திருமாவளவன், தி.மு.க., தரப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் மாறிவிட்டது. அக்கட்சியுடன் இனிமேல் இணைந்து பணியாற்ற, நமது தொண்டர்கள் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தி.மு.க., கூட்டணியை விட்டு, வெளியேறுவது என்ற பா.ம.க.,வின் முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சியையோ, ஆச்சிரியத்தையோ ஏற்படுத்தவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரையில், இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாகக் கருதுகிறது. தி.மு.க., கூட்டணியை முறிப்பதற்கு, பா.ம.க., வின் சுயலாபக் கணக்கு தான் காரணம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் 2013ம் ஆண்டில், ஒரு ராஜ்யசபா சீட் பா.ம.க., வுக்கு தரவேண்டும் என, தி.மு.க., விடம் போடப்பட்ட தேர்தல் உடன்பாட்டினால், இனி லாபமில்லை. ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்கான எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விடம் இல்லை என்பதால், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர, பா.ம.க., விரும்பவில்லை.

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.,வின் கரிசனம் கிடைக்கும். அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், முக்கிய எதிரிகளாகக் கருதப்படும் ராமதாஸ், அன்புமணி வழக்கு விசாரணையிலிருந்து மீளமுடியும் என்ற எதிர்பார்ப்பும், முக்கிய பங்கு வகிக்கிறது.வட மாவட்டங்களில் திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்ப்பதை, வன்னியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாவளவனை விட்டு விலகுவதால், பா.ம.க., வுக்கு லாபம் என்ற கருத்தும் கணிக்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை ராமதாஸ் விமர்சனம் செய்யாமல் இருந்தார். இதனால் ராமதாஸ் மீது, வன்னியர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். இனிமேல், ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சிப்பதன் மூலம், வன்னியர்களின் அதிருப்தியைப் போக்க முடியும் என்ற கணக்கும் கணிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பென்னாகரம் பார்முலா மூலம், ஓட்டு வங்கியை பலப்படுத்துவது, தி.மு.க., அணியில் போட்டியிட்டு தோல்வி அடைவதை விட, வட மாவட்டங்களில் தனித்து நின்று, கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பேராசையும், முக்கிய காரணமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க., பொதுச் செயலர் வடிவேல் ராவணன் தலைமையில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரனின் விழாவில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அவ்விழாவின் மூலம், தென் மாவட்டங்களில் பா.ம.க.,வை வளர்ப்பதற்கு, தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை கையில் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி சுய லாபத்திற்காகவே தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...