|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

ராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவுக்கு அமெரிக்காவில் தூதர் பதவியா?- திருமா!

சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய அரசு வரவேற்று உபசரித்ததன் மூலம் தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புண்படு்த்தியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற குழுவினர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களிளை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததற்காக இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல், போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு நாடாளுமன்றத்தில் கெளரவம் அளித்த இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கது.

இனப் படுகொலையை நடத்திய ராஜபக்சேவையோ அல்லது அவரது நாட்டின் தலைவர்களையோ உலகின் எந்த நாடும் வரவேற்பதில்லை. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து அவரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது.

அதுமட்டுமின்றி ராஜபக்சே எவ்வளவோ முயன்றும் அவரை சந்திக்க இங்கிலாந்து தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே அங்கிருந்து வெளியேற நேரிட்டது. அதேபோல் ராஜபக்சே அமெரிக்கா சென்றால் அவரைக் கைது செய்ய அந்நாட்டுடு நீதிமன்றமும், காவல்துறையும் காத்திருக்கின்றன.

இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை கொண்ட இந்திய அரசு மட்டும் இலங்கை அதிபரையும், அந்நாட்டு தலைவர்களையும் மாதத்திற்கு ஒருமுறை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழத்திற்கு வந்தபோது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து திருப்பி அனுப்ப்பட்டனர். ஆனால், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய அரசு வரவேற்று உபசரிப்பது தமிழகத்திலுள்ள 7 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.

ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் கொலைக்குற்றம் சாற்றப்பட்ட சிங்களத் தலைவர்களை இந்தியாவுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு, ராஜபக்சே உள்ளிட்டோர் மீது போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தொடர்ந்து தமிழினத்துக்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு-திருமா:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே போர்க்குற்றம் புரிந்த சிங்கள எம்.பிக்களை வரவழைத்து விருந்தினர்களாக கெளரவப்படுத்தி தமிழர்களின் உணர்வுகளை அவமதித்துள்ளது மத்திய அரசு என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினத்துக்கு விரோதமான நடவடிக்கையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாள் அன்றே சிங்கள நாடாளுமன்றப் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அனுமதித்து தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு அவமதித்துள்ளது. சிங்கள நாடாளுமன்ற பேரவைத் தலைவர் சமல் ராஜபக்சே தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

01.08.2011 மக்களவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் திருமதி மீராகுமார், ""இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் நமது மக்களவை நடவடிக்கைகளை கவனிக்க வந்திருக்கிறார்கள்!'' என்று அறிவிப்புச் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை கோடானுகோடித் தமிழர்களைக் காயப்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் குழு தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இருப்பதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது.

சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டிலேயே பயிற்சியளிப்பது, இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தன்னுடைய பதவி ஓய்வுபெறும் நிலையில் ராஜபக்சேவோடு விருந்தில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான உறவில் உள்ள இணக்கத்தையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இது தமிழர்களை அவமதிப்பதாக இருக்கும், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது என்ற கருத்து உருவாகும் என்கிற அச்சம் இல்லாமல் இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

பதவி ஓய்வு பெற்றுவிட்ட நிலையிலும் ராஜபக்சேவோடு விருந்து உண்ட நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருப்பதை, தமிழினத்துக்கெதிராகச் செயல்பட்டதற்காகவே நிருபமா ராவுக்கு பாராட்டிப் பரிசு வழங்கியிருப்பதாகவே உணர முடிகிறது.

இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. சமல் ராஜபக்சே தலைமையிலான பிரதிநிதிகளை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...