|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 August, 2011

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதி எண் 193 கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, உண்ணாவிரத நாடகம் போட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இந்தப் போருக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியா தான் தருகிறது என்ற உண்மையை வெளியில் சொல்ல பயந்தார். காரணம், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் கோபித்துக் கொள்வார்கள், கூட்டணியி்ல் சிக்கல் வரும் என்ற பயம்.

இப்போது தேர்தலில் தோற்று, கூட்டணியிலிருந்து திமுகவை கழற்றிவிட காங்கிரசும் தயாராகி வரும் நிலையில், இலங்கையில் நடந்த போர் குறித்தும், அப்பாவித் தமிழர்கள் பலியானது குறித்தும் திடீரென திமுகவுக்கு கவலை வந்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் திமுக, அதை திசை திருப்ப மீண்டும் இலங்கைப் பிரச்சனையை கையில் எடுக்க முயல்கிறது.

அந்த வகையில் தான் நேற்று மக்களவைத் தலைவரிடம் டி.ஆர்.பாலு மூலம் நோட்டீஸ் கொடுத்துள்ளது திமுக. மேலும் கச்சத் தீவு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய-இலங்கை எம்.பிக்கள் குழு கூட்டம்-திருச்சி சிவா வெளிநடப்பு: இந் நிலையில் இந்திய-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழு கூட்டத்தில் இருந்து திமுக எம்பி திருச்சி சிவா வெளிநடப்பு செய்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 63ல் மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழுவை கெளரவிக்கும் வகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநிலங்களவை எம்பிக்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.

திமுகவின் சார்பில் இக் கூட்டத்தில் திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டம் தொடங்கியவுடன் சிவா எழுந்து தனது கருத்தை தெரிவிக்க முயன்றார். அவருக்கு அனுமதி மறுத்த அன்சாரி, உங்களுக்கு நேரம் அளிக்கும் போது உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்றார்.

ஆனாலும் அதை நிராகரித்துவிட்டு சிவா பேசுகையில், திங்கள்கிழமை காலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபட்ச தலைமையில் இந்தியாவுக்கு வந்துள்ள குழு மாநிலங்களவைக்கு வந்த போது, அவையின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் அமைதியாக கையை கட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. ஆனால் இப்போது என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இலங்கை அரசு உள் நாட்டு போர் என்ற பேரில் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தமிழக பெண்கள் கற்பழிக்கப்பட்டும் பல துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முழு பொறுப்பும் இலங்கை அதிபர் ராஜபக்சேதான். இந் நிலையில் தன்னால் இரு நாடுகளுக்கு இடையேயான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்பு குழுவில் பங்கு கொள்ள இயலாது என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்ட சுதர்ஷன் நாச்சியப்பன் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இலங்கை விவகாரத்தில் இப்போது செய்வதை திமுக முன்பே செய்திருந்தால், எம்.கே.நாராயணன், நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகியோர் மத்திய அரசுக்கு உதவுவதற்காக செய்த தவறுகளை தட்டிக் கேட்டிருந்தால், இலங்கையில் அத்தனை உயிர்கள் அநியாயமாய் பலியாகி இருக்க மாட்டார்கள்.

தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்தோம்-அதிமுக: மத்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு மக்களவையில் ஆட்சேபத்தை தெரிவித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை அதிமுக எம்.பிக்கள் பிரதிபலித்துள்ளதாக அக்கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மக்களவை நிகழ்வுகளைக் காண வந்தபோது அவர்களுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு, இந்திய அரசின் அழைப்பின் பேரில் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை, கெளரவம் அளிக்க வேண்டியது நமது கடமை என்றார்.

கூட்டம் முடிந்தவுடன் தம்பிதுரையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீரா குமார் விளக்கம் கேட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்.பிக்கள் மீரா குமாரைச் சந்தித்தனர். அப்போது, எம்பிக்கள் நடந்துகொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மீரா குமார் கூற, அதற்கு தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர் என்று கூறிவிட்டுத் திரும்பி வந்துள்ளார்.

இலங்கை குழுவிடம் மன்னிப்பு கேட்ட மீரா குமார்: இதற்கிடையே இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு சபாநாயகர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...