|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 August, 2011

ராம்லீலா மைதானத்தில் நாளை முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறார் அன்னா!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின்போது காவல்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மதிப்பதாக 2 பக்கத்தில் உறுதிமொழி அளித்துள்ளது அன்னா ஹஸாரே குழு. இதையடுத்து நாளை முதல் ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவாத கடிதத்தில் அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷன், கிரண் பேடி, சாந்தி பூஷன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.மேலும், இந்த உறுதிமொழிக்குப் புறம்பாக யாரேனும் நடந்தால், தாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையை சந்திக்கத் தயார் என்றும் அன்னா குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இந்த உடன்பாட்டின்படி ராம்லீலா மைதானத்தில் செப்டம்பர் 2ம் தேதி வரை போராட்டம் நடத்திக் கொள்ளலாம். உச்சநீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மைதானத்தில் 25,000 பேருக்கு மேல் கூடக் கூடாது. யாரையும் தூண்டும் வகையில் பேசக் கூடாது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது. சாலைகளில், சாலையோரம் யாரும் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. போக்குவரத்தை சீரமைப்பதில் போலீஸாருடன் போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

பட்டாசு வெடிக்கக் கூடாது, மத துவேஷ் கருத்துக்கள் முழங்கக் கூடாது, குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும், டாய்லெட்டுகள் அமைக்கப்பட வேண்டும், லத்தி, ஆயுதம் உள்ளிட்டவற்றுடன் வரக் கூடாது, ஒளிவிளக்கு வசதி செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

மேலும் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஸாரேவை ஒரு நாளைக்கு மூன்று முறை அரசு டாக்டர்கள் பரிசோதிப்பார்கள். இந்த உறுதிமொழிகளை ஏற்பதாக கையெழுத்திட்டுள்ள அன்னா குழுவினர் இந்த உத்தரவாதக் கடிதத்தை மத்திய டெல்லி மாவட்ட துணை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மைதானம் தயாராகவில்லை: இதையடுத்து ராம்லீலா மைதானத்தை செம்மைப்படுத்தும் வேலைகள் தொடங்கிநடந்து வருகின்றன. தற்போது மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவது நாளை வரை தள்ளிப் போயுள்ளது. இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், ராம்லீலா மைதானம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே அன்னா ஹஸாரே நாளை அங்கு சென்று தனது போராட்டத்தைத் தொடங்குவார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மைதானம் முழுவதும் குப்பையாகவும், செம்மையில்லாமலும் இருப்பதால் அன்னாவால் தற்போது அங்கு போக முடியாத நிலை உள்ளது. டெல்லி மாநகராட்சி கமிஷனர் மேஹ்ராவுடன் பேசியுள்ளேன். அவர்விரைவில் மைதானத்தை சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். எனவே இன்று போராட்டத்தைத் தொடங்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாளை வரை அன்னா அங்கு செல்வது தள்ளிப் போயுள்ளது என்றார்.

அரசு, அன்னா இடையிலான ஒப்பந்தத்திற்கு வரவேற்பு: இதற்கிடையே உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக அன்னா ஹஸாரேவுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்து கொள்ளுதல் பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது என்று அன்னா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அன்னா குழுவைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன் கூறுகையில், 15 நாட்களுக்கு அன்னா உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்திருப்பதும், பல தேவையற்ற நிபந்தனைகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதும் வரவேற்புக்குரியது. அதேபோல அன்னாவுடன் ஆலோசனை நடத்தி ஜன் லோக்பால் மசோதாவைக் கொண்டு வரவும் அரசு முயல வேண்டும் என்றார்.

சுவாமி அக்னிவேஷ் கூறுகையில், ஹஸாரேவுக்கு ராம்லீலா மைதானத்தில் இடம் அளித்ததை வரவேற்கிறோம். இது மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார். அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், போர் இனிதான் தொடங்கவுள்ளது. மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...