|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

சட்டத்தால் தொட முடியாதவர்களா டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள்?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில், கடந்த 14ம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளிடம், தேர்வாணைய உறுப்பினர் ஒருவர், "நாங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விசாரிப்பதென்றால், மாநில அரசு, கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும். பின், ஜனாதிபதிக்கு அனுப்பி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்று தான், விசாரணை நடத்த முடியும்,' என, வாக்குவாதம் செய்துள்ளார்.சட்டப்படி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்தால், சோதனையில் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், கைது, "ரிமாண்ட்', போலீஸ் கஸ்டடியில் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் என, அடுத்தடுத்த நடவடிக்கைகள் துவங்கி விடும்.ஆனால், தேர்வாணைய உறுப்பினர்களைப் பொறுத்தமட்டில், இத்தகைய எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம், அவர்கள் எழுப்பியுள்ள சட்டப் பிரச்னை தான். இதனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகளும் முடங்கி விட்டன. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களும், அதிர்ச்சியில் உள்ளனர். 

அதிகாரம் உண்டு:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில், சோதனை மற்றும் விசாரணை நடத்த முடியாது என்பது உண்மை தான். சமீபத்தில், அது மாற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை வரம்பிற்குள் வர, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு அதிகாரம் உண்டு,' என்றார்.அவசியம் இல்லை:குற்றவியல் துறை முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா கூறியதாவது: சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதென்றால், கவர்னர் அனுமதி பெற்று, ஜனாதிபதிக்கு அனுப்பி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற வேண்டும் என்று கூறுவது, அவர்கள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தான்.லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.அனைவரும் அரசு ஊழியர்:லஞ்ச ஒழிப்புச் சட்டம், 1998ன் படி, "அரசு ஊழியர்' என்ற பட்டியலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்த முடியும். பிரதமர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரும், அரசு ஊழியர் பட்டியலில் வந்துவிடுவர்.லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில், ஐகோர்ட் நீதிபதிகள் மீதே சி.பி.ஐ., விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். 1983ல் நடந்த, "கருணாநிதி எதிர் தமிழக அரசு' வழக்கில், முதல்வரும் அரசு ஊழியர் தான் என, தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி மீதே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்திய வரலாறுகள் உண்டு.பிரதமருக்கு உத்தரவு:ஸ்பெக்ட்ரம் வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி, பிரதமருக்கே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களை விட, அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல. எனவே, அவர்கள், சட்டப்படியான விசாரணையை சந்திக்க வேண்டும். மாநில அரசும், எந்த தயக்கமும் இன்றி விசாரணையை தொடர வேண்டும்.இவ்வாறு ராஜா கூறினார். தேர்வாணைய உறுப்பினர்களாக இருந்தவர்கள், கடந்த ஆட்சியில், "செகண்ட் லேடி' அந்தஸ்தில் இருந்தவருக்கு, ஒவ்வொரு பணியாளர் தேர்வின்போதும், கணிசமான தொகையை கப்பம் கட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், விசாரணை நடத்த வேண்டும் என, அரசியல் வட்டாரங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...