|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 October, 2011

பார்வையை பாதுகாக்க கண் அழுத்தத்தை கவனிங்க!


மன அழுத்தத்தினால் உடல்நலம் பாதிக்கப்படுவது இயற்கை. ஆனால் கண்ணில் ஏற்படும் கண் அழுத்தத்தினால் பார்வை நரம்பு பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இப்பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்வது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கண் பரிசோதனை அவசியம்: பார்வை நரம்பை பாதித்து முற்றிலும் கண்களின் செயல்பாட்டை இழக்கச் செய்வது குளுகோமா என்று சொல்லப்படும் கண் நீர் அழுத்த நோய். கண்ணின் செயல்பாட்டிற்கு உதவும் திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இந்நோய் உண்டாகிறது. இந்த திரவ அழுத்தமானது நாளடைவில் பார்வை நரம்பின் முனைகோடி பாகங்களை செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் உண்டு. எனவே நாற்பது வயதுக்கு மேல் கண்ணை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். உலக அளவில் பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் கண்நீர் அழுத்த நோய் மூன்றாம் இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 7 கோடி மக்களுக்கு இந்நோய் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர 67 லட்சம் பேர் இருபக்க வாட்டிலும் பார்வை இழப்பிற்கு உள்ளாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளையும் பாதிக்கும்: வயதானவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளையும், கண்நீர் அழுத்த நோய் குறி வைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நோயை ஆரம்பத்திலேயே அறிகுறிகளைப் புரிந்து கொண்டு சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வை இழப்பை சரி செய்ய முடியாது என்பதும் மருத்துவர்களின் எச்சரிக்கை. எனவே வந்தபின் தீர்க்க முடியாத கண்நீர் அழுத்த நோயை வருமுன் காப்பதே நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்புரைநோய்: இந்தியாவில் கண் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு கோடியே இருபது லட்சம். இதில் வயதானவர்களை குறிவைத்துத் தாக்கும் கண் நோய்களில் குளுக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய், சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் என பல உண்டு. அவற்றுள் பெரும்பாலான வயது முதிர்ந்தவர்களை தாக்குவது காட்ராக்ட் எனப்படும் கண்புரை நோய். இதனால் வயதானவர்களுக்கு கண் லென்சுகளின் திறன் குறைவதால் ஒளிக்கதிர்கள் விழித்திரையை அடைவது பாதிக்கப்படுகிறது. இதனால், காட்சிகளை காணமுடியாமல் போவதே கண்புரைநோய் எனக்கூறும் மருத்துவர்கள் இந்நோயால் பார்வைத்திறன் முற்றிலும் பறிபோய்விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கண்புரை நோய் ஏற்பட்டால், கண்களின் நீர் பைகளில் அடைப்பு உருவாகி, நீர் கசிவு நீடிக்கும். மேலும் கண்களில் அழுக்கு போன்ற தன்மையும், தொடர்ந்து வெளியேரும். இப்பிரச்சினைக்கு காட்ராக்ட் அறுவை சிகிச்சை முறையே சரியான தீர்வு என்கின்றனர் மருத்துவர்கள். கண் நோய்களில் 63 சதவிகிதத்தினரை கண் புரைநோய் தாக்கியுள்ளதாக கூறும் மருத்துவர்கள் இதற்கென காட்ராக்ட் அறுவை சிகிச்சை பெறுபவர்கள் இரண்டு நாட்களிலேயே இயல்பு நிலையை அடையலாம் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...