|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

ஏழரைச் சனி ஆரம்பம்...!


சனிக் கோளின் வானவியல் ஆய்வு : குரு கிரகத்துக்கு அடுத்து பெரிய கிரகம் சனி. இதன் குறுக்களவு சுமார் 73,000 மைல். "சனி வளையம்' என்று கூறப்படும் வளையத்தின் குறுக்களவு 1,70,000 மைல். மிக லேசான பொருட்களால் ஆனதால் இந்த கிரகத்தின் அடர்த்தி மிகவும் குறைவு. 0.715- அதாவது தண்ணீரைவிட குறைவான ஒப்படர்த்தி உள்ளது. எனவே, சனி கிரகத்தை பெரிய கடல் நீரில் போட்டால் மிதக்கும். சூரியனிலிருந்து இதன் தொலைவு 89.6 கோடி மைல். பூமிக்கும் சனிக்கும் இடையில் உள்ள தொலைவு 75 கோடி மைல். இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 14 நிமிடங்கள் ஆகின்றன. அதனால் கிட்டத்தட்ட பத்தரை மணி நேரமே சனி கிரகத்தின் ஒருநாள். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர இருபத்தொன்பதரை ஆண்டுகள் ஆகின்றன. அதாவது பூமியில் இருபத்தொன்பதரை ஆண்டுகள் கழிந்தால் சனியில் ஓராண்டு கழிந்திருக்கும். சாதாரணமாகப் பார்த்தால் மஞ்சள் நிற நட்சத்திரமாக இது தெரியும். தொலைநோக்காடியின் மூலம் பார்த்தால் இதைச் சுற்றியுள்ள வளையம் தெரியும். வேறு எந்த கிரகத்திற்கும் இத்தகைய வளையம் கிடையாது. 1610-ல் கலிலியோதான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார். சனியை இந்த வளையம் மிக வேகமாகச் சுற்றுகிறது. உள்ளுக்குள் உள்ளாய் மூன்று வளையங்கள் உள்ளன என்று தற்கால ஆராய்ச்சியில் கண்டிருக்கிறார்கள். சனிக்கு ஒன்பது உட்கிரகங்கள் உள்ளன. அவற்றுள் டைட்டன் என்பது மிகப்பெரியது. இது சனியிலிருந்து 76,000 மைல் தூரத்தில் உள்ளது. சந்திரனைவிட இரட்டிப்பு கனமுடையது. எப்போதும் கடுமையான குளிர். பிராணவாயு இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. சனி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும்போது பம்பரம்போல் பக்கவாட்டில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். இதுவரை கன்னி ராசியில் இருந்த சனி பகவான் (21-12-2011) கர வருடம், மார்கழி மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை, நாழிகை 3.30 அளவில் (காலை 7.30) துலா ராசிக்கு- சித்திரை 3-ஆம் பாதத்தில் மாறுகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா வாக்கியப் பஞ்சாங்கப்படி 21-12-2011-ல்தான் நடக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 15-11-2011 கர வருடம், ஐப்பசி மாதம் 29-ஆம் தேதி நாழிகை 10- 11 விநாடிக்கு (காலை 10.05 மணி) அளவில் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப்படுகிறது. சனீஸ்வரருக்கு அதிகாரப்பூர்வமான தலம் திருநள்ளாறுதான்! ஊர் ஊருக்கு அய்யப்ப சுவாமிக்கு கோவில் கட்டினாலும், கேரளத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலே அதிகாரப்பூர்வமான கோவில் என்பதுபோல திருநள்ளாறு கோவிலே சனீஸ்வரருக்கு உரிய திருத்தலம். அதனால் நாமும் சனிப்பெயர்ச்சி நாளாக 21-12-2011-ஆம் தேதியை எடுத்துக் கொள்வோம். 

அந்த காலத்தில் கோடீஸ்வரனாக இருப்பது ரொம்பவும் அபூர்வம். அதேபோல கோடீஸ்வரர் வீட்டில் குடை வைத்துக் கட்டி குடைவீடு என்பார்கள். இந்த காலத்தில் கோடீஸ்வரர்கள் என்பது சர்வ சாதாரணம்.

மற்ற எல்லா கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு.

ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி; வீட்டிலும் நாட்டிலும்- அரசியல், ஆன்மிகம், சமுதாயம், பொது வாழ்வு, தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனி எனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனி எனப்படும்.

அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில்  சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனி, குடும்பச் சனி, வாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு; கோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு. சனீஸ்வரரால் சங்கடப்படுகிறவர்களும் பாதிக்கப்படுபவர்களும் சோதிக்கப்படுகிறவர்களும் பக்தியோடு அவரைச் சரணடைந்து வழிபட்டால் சனியின் கருணைக்குப் பாத்திரமாகலாம். அவர் பிடியில் இருந்தும் விடுபடலாம்.

சனி காயத்ரி மந்திரம்

"காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோயாத்'.

சனி ஸ்லோகம்

"நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்டம் ஸம்பூதம்
தம் நமாமி சனைஸ்சரம்.'

தமிழ் துதி

"சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வர தேவே 
இச்சகம் வாழ இன்னருள் தா! தா!'

"முனிவர்கள் தேவர்கள் ஏழுலக மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையது அல்லாதுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே
காகமேறும் சனி பகவானே உனைத் துதிப்பேன்
தமியேனுக்கு அருள் செய்வாயே!'

நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநு, யமன் (மகன்கள்); யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும், அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்' என்று உதாசீனமாகப் பேசவே, யமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது.

இந்நிலையில் சூரியனுக்கு தன் மனைவியைப் பற்றிய உண்மை தெரிய வந்தது. தன்னைவிட்டுப் பிரிந்துபோய் தவம் செய்து கொண்டிருந்த மூத்த மனைவி சஞ்ஞிகையை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தான். அதனால் சனிக்கு விரக்தி ஏற்பட்டு காசிக்குச் சென்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு கிரக பதவி பெற்றான். ஈஸ்வரனால் சனீஸ்வரன் என்ற பட்டம் பெற்றான்.  சனிக்கு மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்று பல பெயர்கள் உண்டு. சனிக்கு நீலா என்பவள் மனைவி. அவளைத் தவிர மந்தா, சேஷ்டை என்ற இரு மனைவிகளும் உண்டு என்று நூல்கள் கூறும். சனிக்கு குளிகன் என்ற மகனும் உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறும். ஒவ்வொரு நாளிலும் குளிகனுக்குரிய காலம் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நற்காரி யங்கள் செய்தால் மேன்மேலும் விருத்தி உண்டாகும் என்றும்; தீய காரியங்கள் செய்யக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

சனி பகவான் ஒரு முகமும் நான்கு கைகளும் உடையவன். மேல் இரு கைகளில் அம்பும் வில்லும்; கீழ் இரு கைகளில் வாளும் வரதமும் கொண்டவன். நீல மேனி உடையவன். சடைமுடி தரித்தவன். கருநிற ஆடை, கரு சந்தனம், நீல மலர் மாலை, நீல மணி மாலை புனைந்தவன். இடப்பாகத்தில் நீலா என்ற தேவியைப் பெற்றுத் திகழ்பவன். சனி பகவான் வில் வடிவமான ஆசனத்தில், சூரியனுக்கு முன்பாகிய மேற்கு திசையை தனக்குரிய இடமாகக் கொண்டு குள்ள வடிவினனாக வீற்றிருப்பவன். அலித்தன்மையும் தாமத குணமும் கொண்டவன். உலோகம்- இரும்பையும்; ரத்தினம்- நீலத்தையும்; தானியம்- எள்ளையும்; புஷ்பம்- கருநீல மலரையும்; சமித்து- வன்னியையும்; சுவை- கசப்பையும்; பாஷை- அன்னிய பாஷையையும்; வாகனம்- காகத்தையும் கழுகையும் தனக்கென்று உரியவன். ஆயுள் காரகன் சனிக்கு அதிதேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. யமன் சனி பகவானுக்கு வலமாகவும், பிரஜாபதி சனிக்கு இடமாகவும் விளங்குபவர். சனிக்குரிய தலமாக திருநள்ளாறு திகழ்கிறது. இத்திருத்தலம் காரைக் காலுக்கு அருகில் இருக்கிறது. நள மகாராஜாவுக்கு விமோசனம் கொடுத்த தலம். நளச் சக்கரவர்த்திக்கு ஏழரைச் சனி காலத்தில் பல வகையிலும் கஷ்ட- நஷ்டங்களைத் தந்து முடிவில் சனி விலகிய இடம். ஒவ்வொரு புண்ணிய தலத்திற்கும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற பெருமைகள் உண்டு. திருநள்ளாறில் இம்மூன்று பெருமைகளும் உண்டு. இத்தலத்தின் மூர்த்தி தர்ப்பாரண்யேஸ்வரர். கிழக்கு பார்த்த சந்நிதி. சுயம்புமூர்த்தி. தர்ப்பை வனத்தில் எழுந்தருளியதால் தர்ப்பை யிலான வடுக்கள் திருமேனியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பாள் பிராணேஸ்வரி என்றும்; யோக மார்த்த பூண்முலையாள் என்றும் பெயர் வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திர னிடமிருந்து வாங்கி வந்த சப்த விடங்க பெருமான் என்னும் ஏழு லிங்கங்களில், இரண்டாவது நகவிடங்கத் தியாகர் இங்கு அருள் பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் அஷ்டதிக் பாலகர்கள் எட்டு பேரும் எட்டு தீர்த்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சந்நிதிக்கு எதிரே வாணி தீர்த்தமும், கோவில் வட திக்கில் அன்ன தீர்த்தமும் அகத்திய தீர்த்தமும், வடமேற்கில் நள தீர்த்தமும், அதற்குப் பக்கத்தில் நள கூபமும் உள்ளன. பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அம்ச தீர்த்தம் என்று பதின்மூன்று தீர்த்தங்கள் உண்டு. அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் கிழக்குப் பக்கத்தில் சனி பகவான் திருச்சந்நிதி இருக்கிறது. மற்ற எட்டு கிரகங்களும் இல்லாமல் சனி பகவான் மட்டுமே தனி யாகக் காட்சி தருகிறார். கலி நீங்கிய நள மகாராஜன் நள தீர்த்தத்தை உருவாக்கி வைகாசி மாதம் புனர்பூச நன்னாளில் திருவிழா நடத்திப் புகழ்பெற்றதாக திருஞான சம்பந்தர் தமது பதிகத்தில் பாடியுள்ளார். வைகாசி மாதம் உத்திரட்டாதியில் தொடங்கி பதினெட்டு நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். சனிப்பெயர்ச்சிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து நள தீர்த்தத்தில் நீராடி ஈர உடைகளை அங்கேயே விட்டுவிட்டு கோவிலுக்குச் சென்று வழிபடுவது உத்தமம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...