|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2012

65 சாப்பிட விருப்பமா?

சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நிறங்கள் உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.  அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

கழுத்துக் கழலை நோய் சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது. மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிறுவர்களுக்கு ஆபத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள். இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...