|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

தனியார் பள்ளிகளில் 2 லட்சம் ஏழை மாணவர்களுக்கு இடம்!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் சேர வாய்ப்புள்ளது.இந்த ஒதுக்கீட்டின்கீழ் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவும், ஏழை மாணவர்களுக்கான கல்விச் செலவுக்காகவும் மாநில அரசுக்கு 13-வது நிதிக் குழு ரூ.141 கோடி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த மாணவர் சேர்க்கையை மே 1-ல் தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகிய தொடக்க வகுப்புகளில் அருகமையில் உள்ள ஏழை மாணவர்கள், சமூக ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் இந்தச் சட்டம் எவ்வாறு அமல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்தச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் கடந்த ஆண்டே வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை சார்பில் விளக்கக் கையேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.


சட்டம் குறித்து பள்ளிகள், பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு தொலைபேசி மையமும் (044-2827 8742) ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சட்டம் தொடர்பாக 4 ஆயிரம் தனியார் பள்ளி முதல்வர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், கல்வித் துறை மூத்த அதிகாரிகள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.கடும் நடவடிக்கை: தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக 13-வது நிதிக் குழு ரூ.141 கோடியை வழங்கியுள்ளது.எனவே, தனியார் பள்ளிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவதில் எந்தவித சிரமும் இருக்காது. இந்த ஒதுக்கீட்டின் மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கும்.ஏழை, பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றாத பள்ளிகளின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


"ரேண்டம்' முறை: இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தால், அந்த மாணவர்களைத் தேர்வு செய்ய "ரேண்டம்' முறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு அவர்களுக்கோ, அவர்களது பெற்றோருக்கோ நேர்முகத் தேர்வு எதையும் நடத்தக் கூடாது. நேர்முகத் தேர்வு நடத்தினால் முதல்முறை ரூ.25 ஆயிரமும், அதற்குப் பிறகு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் கட்டணம் எவ்வளவு? அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்குச் செலவிடப்படும் தொகை அல்லது கட்டண நிர்ணயக் குழுவால் அந்த தனியார் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதில் எது குறைவோ, அந்தத் தொகையை அந்தத் தனியார் பள்ளிக்கு மாநில அரசு வழங்கும். செப்டம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணைகளாக தனியார் பள்ளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.


ஒவ்வோர் கல்வியாண்டிலும் தங்களது பள்ளிகளில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை ஜூலைக்குள் உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கு கட்டணத்தைப் பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கி கணக்கைத் தொடங்க வேண்டும்.கிராமப்புறங்களில் இடங்கள் நிரம்புமா?தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் குறைந்தபட்சமாக 25 சதவீதம் பேர் என்றாலும் கூட, சுமார் 2 லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேரலாம்.


அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், சிறப்பு ஊக்கத் தொகை, இலவச லேப்-டாப், சீருடைகள், உபகரணப் பெட்டிகள், செருப்புகள் என ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் ஏழை மாணவர்கள் அதிகமானோர் சேருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அங்கெல்லாம் 25 சதவீத இடஒதுக்கீடு நிரம்பாத நிலையும் இருக்கும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே இறுதிக்குள் இந்த இடஒதுக்கீட்டில் மாணவர்களைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 
யாருக்கு இடஒதுக்கீடு?பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அவர்களது குழந்தைகள் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்த இடஒதுக்கீட்டைப் பெறலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...