|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 March, 2011

கலைத்துறையில் என் குடும்பம் இருக்கக்கூடாதா? கருணாநிதி

முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்‌கதை, வசனம் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

படத்தின் பாடல் சி.டி.,யை முதல்வர் வெளியிட தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது, தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டது. இந்நேரம் நான் ஏதாவது ஒரு கூட்டத்தில் என்னுடைய கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய பெரும் பணி இருக்கிறது. அந்தப் பணியையெல்லாம் ஒத்தி வைத்துவிட்டு, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றால் இந்த பணியையும் நான் அந்தப்பணியை போல மதிப்பது தான் காரணம். 

சினிமா உலகத்தை விட்டு, திரைப்படத் துறையை விட்டு, எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான். நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், எழுத வேண்டும், எழுத வேண்டும், எழுத வேண்டும் என்பதிலே தான். எழுத்தை மறந்து விட்டு, இந்தக் கலைத் துறையை விட்டு, இலக்கியத் துறையை விட்டு விட்டு, அரசியல் துறையில் மட்டும் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் முடியாத காரியம். எனவே தான் அரசியல் துறையில் ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

ஒரு பெரியவர் ஒருவர் சொல்லியிருக்கிறார், கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!
சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம் தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிறோம்? மன்னிக்க வேண்டும் ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

சிலர் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன், அவர்களுடைய நன்மைக்காக, வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள், நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...