|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

அன்னா ஹசாரேவுடன் விஜய் உண்ணாவிரதம்!

ஊழலை ஒழிக்க காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய், டில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார். நாட்டில் ஊழ‌லை ஒழிக்கவும், வலுவான லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தியும் தொடர்ந்து 10வது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹசாரேயின் இந்த உண்ணாவிரதத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக விமானம் மூலம் டில்லி சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக ராம் லீலா மைதானத்திற்கு வந்து, ஹசாரேயை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டார்.

பின்னர் உண்ணாவிரத மேடையில் விஜய் பேசியதாவது, ஊழலை ஒழிக்க ஹசாரே அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த உண்ணாவிரதம், நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில், புது எழுச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த எழுச்சியை கோடிக்கணக்கான இந்தியர்கள் கவனித்து வருகிறார்கள். இது வெற்றி பெற வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். வெற்றி கிடைத்தால் காந்தியின் அஹிம்சை கொள்கைக்கு இது மேலும் வலு சேர்க்கும். இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்பது நமது கடமை, இதில் நானும் பங்கேற்று எனது கடமை செய்துள்ளேன். இந்த உண்ணாவிரத ‌போராட்டம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு ஹசாரே அவர்களின் உடல்நலமும் முக்கியம், அவருக்கு  ஆரோக்கியமான உடல்நிலையை அந்த ஆண்டவன் வழங்க வேண்டும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு நானும், எனது மக்கள் இயக்கமும் முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

ஹசாரேவுக்கு ஆதரவாக இருதினங்களுக்கு முன்னர் தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோது ஒருசில நடிகர், நடிகையரை தவிர மற்ற நடிகர்கள் யாரும் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் உட்பட கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...