|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 August, 2011

மோசடியில் வாங்கிய நிலத்தில் திருச்சி அறிவாலயம்! Nehru arrested in land grab case


தமிழகத்தில் நடந்துள்ள ஏகப்பட்ட நில மோசடி வழக்கில் முன்னாள் ஆட்சியாளர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை திருச்சியில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் வைக்கப்பட்டுள்ள போலீஸ் ஆயுதபடை திருமண மண்டபத்தில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான நில மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க, அரசு இது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் பணிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மதுரை, சென்னை, ஈரோடு, சேலம், கோவை என பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க., நிர்வாகிகள், மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் , மாஜி எம்.எல்.ஏ.,க்கள் என இது வரை 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு வீட்டில் இன்று காலையில் அதிரடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். இவரது வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நேருவை கைது செய்து திருச்சி ஆயுத படை திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இவருடன் மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜூலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கின் சாராம்சம் என்ன ? : கடந்த 2009 ல் திருச்சியில் ஒரு தி.மு.க,வின் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அறிவாலயத்தை கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமா ன கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய சென்னை அறிவாலய மாடலில் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென ஒரு ஏக்கர் நிலம் டாக்டர் சீனிவாசன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இந்த நிலம் பல கோடி மதிப்பு பெறும். ஆனால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தன்னை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து போட வைத்ததாகவும், சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்திய போலீஸ் கே.என்., நேரு மாஜி எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, லால்குடி எம்.எல்.ஏ., சௌந்திரராஜன், ராமாநுஜம் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் கே.என்., நேரு, உள்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். இன்னும் தலைமறைவாக உள்ள தி.மு.க.,வினரை தேடி வருகின்றனர்.

பொய் வழக்கை சட்டப்படி சந்திப்போம் : கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற போது நிருபர்களிடம் பேசிய நேரு; நாங்கள் யாரையும் அடித்து, மிரட்டி வலுக்கட்டாயமாக நிலத்தை வாங்கவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. இது பொய் வழக்கு, சட்டப்படி சந்திப்போம் என்றார்.

கடலூர் சிறையில் அடைப்பு : வழக்கில் கைது செய்யப்பட்ட விவரத்தை பதிவு செய்யும்போது நேருவின் உடல் அங்க அடையாளம் குறிக்கப்பட்டது. இவர் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 4 ல் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் புஷ்பராணி வரும் செப் 8 ம்தேதி வரை ரிமாண்‌ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். முதலில் திருச்சி சிறைக்கு‌ கொண்டு செல்லப்பட்டு பின்னர் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கடலூர் கொண்டு செல்லும் வழியில் தொண்டர்கள் போலீஸ் வேன் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தொண்டர்கள் யாரும் மறியலில் ஈடுபட வேண்டாம் எல்லோரும் போங்கடா என வேனில் இருந்து இறங்கி வந்து விரட்டினார்.

நெருக்கடி காலத்தை நினைவுப்படுத்துகிறது - கருணாநிதி : தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவது நெருக்கடி காலத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது என சட்டசபையில் உள்ள வருகை பதிவேட்டில் இன்று கையெழுத்து போட வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: சட்டசபைக்கு தி.மு.க., உறுப்பினர்கள் வராதது குறித்து தாம் எதுவும் கூற முடியாது. பேரவையில் எனக்கு அமரும்படி எவ்வித இட வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் குறை கூறினார். கைது கண்டித்து போராட்டம் நடத்தப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழுதான் முடிவு செய்யும் என்றார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை அழகிரி எச்சரிக்கை : திருச்சி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியை சந்திக்க வந்த மத்திய அமைச்சர் அழகிரி கூறுகையில்; தி.மு.க,வினர் கைது செய்யப்படுவது ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றார். மேலும் எங்கள் மீது பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது , நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஜவுளி கடை ஒன்றின் உரிமையாளர் சுந்தரராஜுலு ஆகியோரையும் போலீஸôர் கைது செய்து சமுதாயக் கூடத்துக்கு அழைத்து வந்தனர். கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இவர்கள் மூவரும், குற்றவியல் நடுவர் புஷ்பராணியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மூவரையும் செப்டம்பர் 8-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நடுவர் புஷ்பராணி உத்தரவிட்டார். இதையடுத்து, மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அங்கிருந்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.


மேலும் 4 பேர் கைது:

இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, திருச்சி மாநகராட்சி துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட திமுக துணைச் செயலர் குடமுருட்டி சேகர், பந்தல் ஒப்பந்ததாரர் மாமுண்டி, நிலத் தரகர் ஷெரீப் ஆகியோரும் வியாழக்கிழமை பகலில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.


வழக்கு விவரம்:

திருச்சியில் கரூர் புறவழிச் சாலையில் மாவட்ட திமுகவுக்காக "கலைஞர் அறிவாலயம்' என்ற பெயரில் திருமண மண்டபமும், திமுக அலுவலகமும் கட்டப்பட்டது. இதைக் கடந்த 2008-ம் ஆண்டு, செப். 21-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்தக் கட்டடத்துக்காக அந்தப் பகுதியில் 3 பேரிடம் இருந்து மொத்தம் 56,333 சதுரஅடி நிலம் வாங்கப்பட்டது. 20,433 சதுரஅடி நிலம் வக்பு வாரியத்திடம் 99 ஆண்டு குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. நிலம் விற்ற 3 பேரில் ஒருவர்தான் தற்போது புகார் அளித்துள்ள டாக்டர் கே. சீனிவாசன். இவருடைய நிலத்தின் அளவு 13,920 சதுரஅடி.


இந்த இடத்தை மிரட்டி வாங்கும் நோக்கத்தில் டாக்டர் கே. சீனிவாசன், அவரது மனைவி மணிமேகலை, சீனிவாசனின் தந்தை கிருஷ்ணசாமி ஆகியோரை துறையூரிலிருந்து திருச்சிக்கு கடத்தி வந்ததாகவும், கே.என். நேரு அலுவலகத்தில் அவரது தம்பி கே.என். ராமஜெயம், சுந்தரராஜுலு, ஷெரீப், அ. செüந்தரபாண்டியன், அன்பில் பெரியசாமி ஆகியோர் அடித்து மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலத்துக்காக ரூ. 2.40 கோடி கொடுப்போம் என உறுதியளிக்கப்பட்டு, முன்தொகையாகக் கொடுத்த ரூ. 40 லட்சத்தையும் துணை மேயர் மு. அன்பழகன், மாவட்ட திமுக துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோர் துறையூர் செல்லும் வழியில் பறித்து வந்துவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகாரின் பேரில், கே.என். நேரு, கே.என். ராமஜெயம், குடமுருட்டி சேகர், மு. அன்பழகன், அன்பில் பெரியசாமி, சுந்தரராஜுலு, அ. செüந்தரபாண்டியன் (தற்போதைய லால்குடி எம்எல்ஏ), பந்தல் ஒப்பந்ததாரர் மாமுண்டி, நிலத் தரகர்  ஷெரீப் மற்றும் கொப்பம்பட்டியைச் சேர்ந்த தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன் ஆகிய 11 பேர் மீது, 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...