|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

ஆண்டுதோறும் ஏப்., 1க்குள் மின் கட்டணம் உயர்த்த வேண்டும்! மத்திய மின்சார தீர்ப்பாயம்!!


ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இதை பின்பற்றாத மாநிலங்கள் மீது, ஒழுங்கு முறை ஆணையங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள, அரசு மின் வாரியம் மற்றும் மின்சார அரசு நிறுவனங்கள், பல்வேறு நிதி நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. கடனில் தத்தளிக்கும் இந்நிறுவனங்கள், கடந்த பல ஆண்டுகளாக, மின் கட்டணத்தை உயர்த்தவும், ஆண்டு கணிப்பு வருவாய் அறிக்கையை சமர்ப்பிக்காமலும், காலம் தாழ்த்துகின்றன என, மின்சார தீர்ப்பாயத்திற்கு, மத்திய மின்துறை செயலர் கடிதம் அனுப்பியிருந்தார்.இக்கடிதத்தை மனுவாக பாவித்து, மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தானாகவே வழக்கு பதிந்தது. இந்த வழக்கு, நீதியரசர் கற்பகவினாயகம் தலைமையிலான உறுப்பினர்கள் ராகேஷ்நாத் மற்றும் தல்வார் ஆகியோரது பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.

கட்டணம் உயர்த்தாததால், கடன் சுமை: இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:அறிக்கைகளை ஆராய்ந்ததில், பல மாநில ஆணையங்கள், இந்திய மின்சார சட்டத்தை சரியாக பின்பற்றாதது தெரிகிறது. மின் கட்டண மாற்றம் குறித்து, ஆணையங்கள் தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க முடியுமா என்றும், மின் கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயம் செய்ய முடியுமா என்றும் கேள்விகள் எழுப்பியுள்ளன.மின் கட்டண மாற்றம் கோரி விண்ணப்பிக்காத தமிழகம், திரிபுரா மற்றும் ராஜஸ்தான் மின்சார அரசு நிறுவனங்கள் மீது, மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க, தீர்ப்பாயம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை பின்பற்றாமல், ஆணையங்கள், சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன.பல மாநிலங்கள், மின் கட்டணத்தை சரியான நேரத்தில் உயர்த்தாமல், பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உத்தரவு விவரம்:
கீழ்க்கண்ட உத்தரவுகள் மாநில மின் ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு பிறப்பிக்கப்படுகின்றன:
* மாநில மின்சார நிறுவனங்கள், கட்டண உயர்வு கோரி மனு மற்றும் ஆண்டு சராசரி வருவாய் கணிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், ஒழுங்குமுறை ஆணையம் தானாக முன்வந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தீர்ப்பாயமே முன்வந்து, ஆணையத்திற்கு <உத்தரவு பிறப்பிக்க அதிகாரமுள்ளது.
* ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 30க்குள், மாநில மின் நிறுவனங்கள், மொத்தமான நிதி அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், கட்டண உயர்வுக்கான முடிவு நாளுக்கு, 120 நாட்களுக்கு முன், மின்சார நிறுவனங்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அந்தந்த மாநில, கடந்த நிதியாண்டு செலவுகள் அறிக்கை மற்றும் கடந்த கால செலவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
* ஆண்டு வருவாய் கணிப்பு அறிக்கையை, ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தாக்கல் செய்ய, மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
* ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், ஆண்டு வருவாய் அறிக்கையை சரிபார்த்தல் மற்றும் கட்டண உயர்வு குறித்து முடிவு செய்ய வேண்டும். இந்த கால நிர்ணயத்தை மனதில் கொண்டு, மின் வாரியங்கள் அறிக்கைகள் மற்றும் மனுவை, முன்கூட்டிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்.
* மின்சார நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் மனுக்கள் தாக்கல் செய்யாவிட்டால், ஒரு மாத காலக்கெடு முடிந்ததும், தேசிய மின்சார சட்ட கொள்கை அடிப்படையில், மின் கட்டணத்தை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வரும் ஆண்டிலும், ஏப்ரல் 1ம் தேதிக்குள், மின்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
* ஆண்டுதோறும், இந்த உத்தரவின்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் செயல்பட்டு, அதன் ஆண்டறிக்கைகளை, ஜூன் 1ம் தேதிக்குள், ஒழுங்குமுறையாளர் கூட்டமைப்பு செயலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர், மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்.
* ஆண்டுதோறும் ஏற்படும் வருவாய் இழப்புகளை சேர்த்து, அடுத்த ஆண்டு கட்டணத்தை அமைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குள், இந்த இழப்புகளை கட்டணம் வாயிலாக, மின்சார நிறுவனங்கள் மீட்டெடுக்கும் வகையில், செயல்பட வேண்டும். இதை, ஒழுங்குமுறை ஆணையங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* மின் உற்பத்தி எரிபொருளுக்கான செலவு மற்றும் மின்சார கொள்முதல் தொகையையும் கணக்கிட்டு, மின் கட்டணங்களை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...