|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

பணிபுரியும் கிராமங்களில் வசிக்காத வி.ஏ.ஓ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ...உயர் நீதிமன்றம்!

பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கபிலர் மலையைச் சேர்ந்த கே.எஸ். விவேகானந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.மனு விவரம்: வி.ஏ.ஓ.க்கள் எந்த கிராமத்தில் பணிபுரிகிறார்களோ, அதே கிராமத்தில்தான் வசிக்க வேண்டும் என்று விதி உள்ளது. வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, ஜாதி சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ் விநியோகம், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ.க்கள் உள்ளனர். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்ய முடியும். ஆனால், மிகப் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் வசிக்கின்றனர். இதனால், மக்களுக்கான பணிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. எனவே, பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.க்கள் வசிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது. 

இந்த மனு மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தது:வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களில்தான் குடியிருக்க வேண்டும் என அவ்வப்போது அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 15-ம் தேதி கூட, தமிழக அரசின் வருவாய்த் துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களில்தான் குடியிருக்க வேண்டும் என ஏற்கெனவே அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போது இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவே, தாங்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வி.ஏ.ஓ.க்கள் குடியிருப்பதை உறுதி செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: வி.ஏ.ஓ.க்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களில் பலர் பணிபுரியும் கிராமங்களில் வசிப்பதில்லை. நகரங்களிலோ, மாவட்டத் தலைநகரங்களிலோ இருந்தபடியே தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். மாதத்தில் சில நாள்கள் மட்டுமே தாங்கள் பணிபுரியும் கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். வி.ஏ.ஓ.க்கள் பணிபுரியும் கிராமங்களிலேயே வசிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அப்படியிருந்தும், வி.ஏ.ஓ.க்கள் கிராமங்களில் வசிக்காதது ஏன்? அவ்வாறு கிராமங்களிலேயே வசிக்காத வி.ஏ.ஓ.க்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை? எனவே, வி.ஏ.ஓ. ஒருவர் தான் பணிபுரியும் கிராமத்தில் வசிக்கவில்லை என புகார் வந்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், அவர் பணிபுரியும் கிராமத்தில்தான் வசிக்கிறாரா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...