|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

தடுப்புக் காவலில் உள்ள கே.பி. எப்படி முல்லைத்தீவு செல்ல முடியும்?: ஐ.தே.க!

அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் உள்ளதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் (கே.பி)  எவ்வாறு விமானப்படை ஹெலிகொப்டரில் ராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.


அத்துடன், வெள்ளைக் கொடி வழக்கிற்கு முன்பதாக கே.பி.யை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. வின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். எமது நாட்டை அழிக்கவும் படையினரையும் மக்களையும் கொலை செய்வதற்கும் சர்வதேச நாடுகளில் நிதி சேகரித்து விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய கே.பி. இன்று அரச விருந்தினராக பாதுகாக்கப்பட்டு வருகின்றார்.

பாராளுமன்றத்தில் பலமுறை கே.பி. தொடர்பாக நாம் கேள்வி எழுப்பினோம். கே.பி. அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும் சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கப்பல்கள், பெற்றோல் நிரப்பும் நிலையங்கள் உட்பட சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொள்ளப் போவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரையில் இவை பெற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா  என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. அத்தோடு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுமில்லை. வழக்கு தாக்கல் செய்யப்படவும் இல்லை. வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்கு முன்பதாக கே.பி. க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். 

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாட்டை அழித்த கே.பி. விமானப்படை ஹெலிகொப்டரில் ராணுவப் பாதுகாப்புடன் முல்லைத்தீவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றார்.


அரச தடுப்புக் காவலில் இருப்பதாக கூறப்படும் கே.பி. அரச விருந்தினராக பாதுகாக்கப்படுகிறார். விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வருவதில்லை என திஸ்ஸ அத்தநாயக்க கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...