|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 August, 2011

இலங்கை பிரச்னை நோட்டீசில் குழப்பம்!

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது. இவரோடு சேர்ந்து சமாஜ்வாடியின் சைலேந்திர குமாரும் இந்த பிரச்னையை கிளப்புவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது, Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.,வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு லிஸ்ட் வினியோகிக்கப்பட்டது.
அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைககள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஒரே விவாதம் குறித்து காலையில் அளிக்கப்பட்ட அலுவல் குறிப்பேட்டில் ஒருவிதமாகவும், மதியம் அளிக்கப்பட்ட குறிப்பேட்டில் மற்றொரு விதமாகவும் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. இரண்டிலுமே பார்லிமென்ட் செகரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் கையொப்பமுள்ளது. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதே பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என கருதப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், இந்த விவாதம் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் அடிப்படையில்தான் ஏற்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், டி.ஆர்.பாலு அளித்த நோட்டீசில் இருந்த வாசகங்கள் ஏன் மாற்றம் செய்யப்பட்டன? அப்படியே மாற்றுவது என்று முடிவு செய்திருந்தாலும்கூட டி.ஆர்.பாலுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. இந்த திடீர் மாற்றத்தை, அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் இன்று அவையில் எழுப்பலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...