|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 November, 2011

2 ஜி வழக்கு விசாரணை துவங்கியது...!


2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. நாடே எதிர்பார்க்கும் இந்த வழக்கில் 150 பெரிய புள்ளிகள் சாட்சியம் அளிக்கவுள்ளனர். இதற்கென காலை 10 மணிக்கு குற்றவாளிகளான ராஜா, கனிமொழி, மற்றும் தொலை தொடர்பு அதிகாரிகள் , கார்ப்ரேட் நிறுவன நிர்வாகிகள் உள்பட 12 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர். ரிலையன்ஸ் அதிகாரி ஆனந்தசுப்பிரமணியன் முதல் கட்டமாக விசாரிக்கப்பட்டார். 

ராஜா தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி: மாஜி அமைச்சர் ராஜா, குறுக்கு விசாரணை நடத்த கூடாது என தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. 2 ஜி விவகாரம் தொடர்பான முழு விசாரணை கைதிகளிடம் சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை விசாரிக்க கூடாது என்ற கோரிக்கையையும் கோர்ட் நிராகரித்து விட்டது. இவரது மனுவுக்கு சில குற்றவாளிகளின் வக்கீல்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என்றனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவன (அனில் அம்பானி குரூப்) அதிகாரிகள் கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும், நம்பிக்கை மோசடி, சதி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்த வழக்கில்,குற்றப் பத்திரிகை தாக்கல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் பதிவு போன்றவை, சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடந்தன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, கடந்த மாதம் 22ம் தேதி, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி சிறையில் இருப்பவர்கள் ஜாமின் பெற முடியும் என்றும், வழக்கு விசாரணை துவங்கும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து, டில்லி ஐகோர்ட்டில் இவர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேநேரத்தில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, இன்று முதல் துவங்கவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, 150 முக்கிய சாட்சிகளின் பெயர்களை, கோர்ட்டில் சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், 28 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இவர்களில் 11 பேர், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள். சி.பி.ஐ., தாக்கல்செய்த சாட்சிகள் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் சேதுராமன், அனந்த் சுப்ரமணியம், ஆஷிஸ் கர்யேகார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சாட்சிகளிடம் முதலில் விசாரணை நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்துவருகிறது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள வழக்கு என்பதால், வரும் நாட்களில் சாட்சியங்கள் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றப்பத்திரிகை: இதற்கிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறுவதற்காக, விதிமுறைகளை மீறியதாக எஸ்ஸார் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் மீது, சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...