|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 November, 2011

பூமிக்கு அருகே வந்து விட்டுப் போன விண்கல் !


பூமிக்கு அருகே, அதாவது 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் அருகே வந்து விட்டுப் போன பெரிய சைஸ் விண்கலத்தைக் காண காத்திருந்த நாசா விஞ்ஞானிகள், மகா இருளாக அந்த விண்கல் இருந்ததால் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அந்த விண் கல்லுக்கு 2005 ஒய்யூ 55 என்று பெயர். இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமையன்று இரவு பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா வி்ஞ்ஞானிகள் பட்டாளம் தயாராக காத்திருந்தது. ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளால் கூட பார்க்க முடியாத அளவுக்கு விண்கல் இருளாக இருந்ததால் பூமிக்கு அருகே வந்து போனதை பார்க்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமை இரவு, பூமியிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்கள் அதாவது தோராயமாக மூன்றே கால் லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கி வந்தது. பூமிக்கு அருகே விண்கல் வந்ததால் அது குறித்து நிறைய தகவல்களை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. விண்கல் பூமியை நோக்கி வந்த சமயத்தில், நிலவின் வட்டப் பாதையில் அது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும். இதற்கு முன்பு பூமியை நோக்கி ஒரு விண்கல் வெகு அருகே நெருங்கி வந்தது 1976ம் ஆண்டு நடந்தது. அடுத்து 2028ம் ஆண்டு இதேபோல நடக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூமிக்கு பக்கத்தில் வந்து போன விண்கல்லானது ஒரு ஹெலிகாப்டர் சைசிலானது. கிட்டத்தட்ட 400 மீட்டர் அகலத்தைக் கொண்டது. அட்டக் கரி நிறத்தைக் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட வடிவில் நகராமல் அது இஷ்டத்திற்கு வேறு வேறு திசையில் நகர்கிறது. மிகவும் மெதுவாக நகரக் கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒருமுறைதான் இது நகருகிறது. இதுகுறித்து நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் சேர்ந்த லேன்ஸ் பென்னர் கூறுகையில், இதுவரையில் பூமிக்கு வெகு அருகே நெருங்கி வந்த ஒரு விண்கல் எது என்றால் அது இதுதான். இவ்வளவு அருகே இதுவரை எதுவும் நெருங்கி வந்ததில்லை என்றார்.

இந்த விண்கல் பூமிக்கு அருகே வந்ததால் அது குறித்த மேலும் பல விரிவான தகவல்களை ஆராய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோன் ஆய்வகத்திலும், பியூர்டரிகோவில் உள்ள அரெக்கிபோ ஆய்வகத்திலும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் விண்கல் பெரும் இருட்டாக இருந்ததால் அதை காண முடியாமல் போய் விட்டது. இந்த இரு ஆய்வகங்களிலும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகள் உள்ளன. ஒலிகளை அனுப்பி அதன் மூலம் இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. அதன் உண்மையான வடிவம், விண்கல் எதனால் ஆனது உள்ளிட்டவற்றை ஆராய காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த விண்கல் குறித்து நாசாவைச் சேர்ந்த டான் யோமன்ஸ் என்பவர் கூறுகையில், 2005 ஒய்யூ 55 விண்கல் மிகவும் வித்தியாசமானது. இது விண்கல்லாக இருந்தாலும் கூட இது ஒரு வகையான கிரகமும் கூட. இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கார்பனும் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே மனிதர்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது இந்த விண்கல் என்றார்.இந்த விண் கல் பூமியில் விழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இது பூமியின் நிலப்பரப்பில் விழுந்தால் 4000 மெகாடன் அளவிலான பெரும் பிரளயம் ஏற்படும். மேலும், 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நான்கு மைல் நீளத்திற்கும், 1700 அடி ஆழத்திலும் பெரும் பள்ளம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர். ஒரு வேளை கடலில் விழுந்தால், விழும் இடத்தில் 70 அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து 2029ம் ஆண்டில் அபோசிஸ் என்ற இன்னொரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி வரப் போகிறதாம். இதுவும் கூட ஒய்யூ 55 போன்ற விண்கல்தான். இதனாலும் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள். இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு அருகே வந்து செல்லுமாம். பூமியிலிருந்து 29,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நெருங்கி வரும் என்பதால் விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்து 2036ம் ஆண்டிலும் இதே விண்கல் பூமிக்கு அருகே வருமாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...