தளர்ந்து இருக்கக்கூடிய மனதை சரிசெய்வதே நமது கடமை. அதனால், பணம் மற்றும் மங்கள பொருட்களை கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தவறி கீழே விழுந்தால் அங்கு நல்ல காரியங்கள் நடைபெறும் என்று சொல்லுவது பெரியோர்களின் வழக்கம். கீழே விழுவதினால் மனம் பதறும் என்ற காரணத்தினால் துக்கம் அடையாமல் உற்சாகத்துடன் இருத்தல் வேண்டும் என்பதினால் கூறியிருக்கலாம். இதனால் பணம் தவறி விழுந்தால் லாபம் என்று கூறி நமக்கு நாமே திருப்தி பட்டு கொள்கிறோம். அதே சமயம் நாம் தவறி கீழே விழுந்தால் நஷ்டமாகி அல்லவா போய்விடும்! பணமோ மங்கலப்பொருள்களோ எதனால் கீழே விழுகிறது, பதற்றம் அடைந்தால் தான் தவறிப்போய் கீழே விழுகிறது. எனவே எதையும் தவறாமல் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பதறாத காரியம் சிதறாது.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
23 February, 2012
போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது சுப்ரீம் கோர்ட்
போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் கறுப்பு பணம் மீட்டு கொண்டு வரக்கோரி டில்லியில் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாஉண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மைதானத்தில் இரவில் தூங்கி கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் களம் இறங்கினர். இது போலீசாருக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பாக மாறியது. தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயமுற்றனர். ராம்தேவ் மேடையில் இருந்து குதித்து ஆதரவாளர்களுடன் கலந்து போலீசார் பிடியில் இருந்து தப்பினார். ஒருவர் பலியானார்.
போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதாகவும் ராம்தேவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் சுவாதந்தர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து. இன்று தங்களுடைய தீர்ப்பில் ; இந்த சம்பவத்தில் பலியான குடும்பத்தினைர சேர்ந்த ராஜாபாலா என்பவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பலமான காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக ரூ. 50 ஆயிரமும், லேசான காயமுற்றவருக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும். நாட்டில் ஒரு பிரச்னை இருக்கிறதென்றால் இந்த இடத்தில் போலீசார் அதிகபட்சமாக அமைதியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அத்துமீறி அங்கு ஒரு வன்செயல்கள் நடக்க காரணமாக அமைந்து விடக்கூடாது.இந்த போராட்டத்தை பொறுத்தவரை அடிப்படையான உரிமையுடன் கூடிய போராட்டம் . இதனை நசுக்க முயற்சிக்க கூடாது. மக்களுக்கும், மக்களை ஆளும் அரசுக்கும் இடையே நம்பிக்கை குறைந்தததை காட்டுகிறது. அதே நேரத்தில் ராம்தேவ் ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட்டத கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களில் வெளியான செய்திகள், கிளிப்பிங்ஸ்கள் ஆகியவற்றை கோர்ட் ஆதாரமாக எடுத்து கொண்டது.
கோர்ட் தீர்ப்பு : மத்திய அரசுக்கு கண்டனம்: அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதன் அம்சத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மாநில போலீசாரும், மத்திய அரசும் தான் பொறுப்பு என பா.ஜ., மூத்த நிர்வாகிகள் , ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராம்ஜெத்மலானி கூறுகையில் : இந்த வழக்கு பாபா ராம்தேவுக்கு வெற்றியாக அமைந்துள்ளது. அவர் பக்கம் நியாயம் இருப்பது கண்கூடாக தெரிய வருகிறது . உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்த உத்தரவே மக்களை வெளியேற்ற காரணமாக இருந்தது. இதனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இது குறித்து பாபா ராம்தேவ் கூறுகையில்:ராம்லீலா மைதானத்தில் அமைதியை பின்பற்ற வேண்டும் என்றுதான் எனது தொண்டர்களிடம் கூறியிருந்தேன். யாரையும் நான் தூண்டும்படி நடந்து கொள்ளவில்லை. என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினேன் ஆனால் போலீசார் அதனை பொருட்படுத்தாமல் அனைவரையும் தாக்க துவங்கினர். அரசு அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற தவறக்கூடாது. 2 ஜி வழக்கு தீர்ப்பிற்கு பின்னர் மத்திய அரசுக்கு மேலும் ஓரு அடியாக இந்த தீர்ப்பு இருக்கும். உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மாநில போலீசார் நெருக்கடிக்கு உள்ளாயினர் என்பது தெளிவாகிறது என்றார். ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இது குறித்து கூறுகையில்; இதற்கு முழுக்காரணமான சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.
கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகளா? சுப்ரீம் கோர்ட் கவலை!
மரண தண்டனை கைதியின் கருணை மனுவை பரிசீலிக்க, மத்திய அரசு பல ஆண்டு கால அவகாசம் எடுத்து கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. டில்லியில், கடந்த 93ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரெய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் ஒன்பது பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் பயங்கரவாதி தேவேந்தர் பால் சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2002ல் மரண தண்டனை அறிவித்தது. இதை தொடர்ந்து தேவேந்தர் பால் சிங், ஜனாதிபதிக்கு 2003ல் கருணை மனு செய்தார். இதுநாள் வரை இந்த மனு பரிசீலனையில் உள்ளது. இந்த கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கக்கோரி, தேவேந்தர் பால் சிங் சார்பில் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. "ஜனாதிபதியிடம் உள்ள கருணை மனுவை விரைவில் பரிசீலிக்கும் படி வற்புறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி உயர் அதிகாரம் படைத்த ஜனாதிபதி, கருணை மனுவை பரிசீலிக்க காலக்கெடு ஏதும் கிடையாது' என, மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜெ.முகோபாத்யாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள கருணை மனு தொடர்பான ஆவணங்களை உள்துறை செயலர்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கருணை மனு தொடர்பான ஆவணங்களை, மூன்று நாட்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டு காலம், எட்டு ஆண்டு காலம் எடுத்து கொள்வது வருத்தம் அளிக்கிறது' என்றது.
யாருக்குச் சொந்தம் கணவர்கள் மோதல்!!!
முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).
இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.
மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்."இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தன
வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இது போன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். காயமடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் :துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறித்த தகவல் வெளியான உடன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரியவரும். எனினும் வடமாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப்பணமும்,துபாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்:கொள்ளையர்கள் பதுங்கியிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோட்டமிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள்ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக்கைவிடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக்குதல்நடத்தினர்.நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட்டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாககிடந்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்:சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகையி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களிலேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடன் ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளையர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென்னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர்களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து்ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெருவில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிருந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப்பகுதியி்ல் கூறி வந்துள்ளனர்.
மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் :என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென்னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலையில் குண்டுகாயமும், கிறிஸ்டிஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப்பேட்டை மருததுவமனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் :சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே
போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறையாக 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள்ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டினர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு்க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் :சுட்டுக்கொல்லப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய்யப்போவதாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் கொள்ளையர்கள் என தெரியாது என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இதனை பார்த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளையர்கள் என்ற தகவல் தெரிந்தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரியவந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல்பட்டுள்ளனர்.கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத் , சகிகரே , அபேகுமார் உள்ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள்ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்ஸ், மாதம் ரூ.5000 வாடகை பேசி தங்கியிருந்தனர்.
ஒரின சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட்!
உலகில் ஏனைய நாடுகளை ஒப்பிடுகையில் பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் வித்தியாசப்பட்டது. மேலை நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கையை இந்தியாவில் நாம் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009 ல் ஒரின சேர்க்கைக்கு அனுமதி வேண்டும் என கோரி டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் ஒத்திசைவு கொண்ட ஒரினத்தவர்கள் சேர அனுமதி மறுக்க வேண்டியது அவசியமில்லை என் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில் : ஒரின சேர்க்கை இயற்கைக்கு எதிரானது. இது சமூக சூழலை கெடுத்து விடும். மேலும் எய்ட்சை பரப்பும் தன்மை கொண்டது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வேறுபட்டது. மேலை நாட்வர்களை நாம் பின்பற்ற முடியாது. நமது நாட்டிற்கென தனிச்சிறப்பு உண்டு இதனால் இதனை அனுமதிக்க முடியாது. குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சட்டங்களை பதம் பார்க்கும் அளவில் இருப்பதால் இது பெரும் சட்ட சவால்கள் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் தனது கருத்தில முரண்பட்டிருந்தது. இதன் மூலம் எய்ட்ஸ் பரவாது என்று கூறியிருந்தது. இதனால் எய்ட்ஸ் பரவுமா இல்லையா என தீவிரமாக கண்டுபிடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது. மேலும் இது போன்ற ஒரின சேர்க்கையை எத்தø நாடுகள் அங்கீகரிக்கிறது? எத்தனை நாடுகளில் குற்றச்செயல்களாக பார்க்கப்டுகிறது என்ற விவரத்தை தருமாறும் நீதிபதிகள் அரசு தரப்பு வக்கீலிடம் கேட்டு கொண்டனர்.
22 February, 2012
இந்தியாவில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் பயிற்சி பெற தடை!
வெளிநாட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்தியாவில் சட்டப்பயிற்சி பெற தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பல சட்டத் தொழில் நிறுவனங்கள் இந்திய நீதிமன்றங்களில் செயல்பட துவங்கின. இதனால் இந்தியாவில் உள்ள சட்டத் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நீதிமன்றங்களில் சட்டத் தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.கே.பாலாஜி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரசன்னா உட்பட பலரும் வாதாடினார்கள். வெளிநாட்டில் இந்திய வழக்கறிஞர்கள் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டத் தொழிலில் ஈடுபடுகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பிறகு நேற்று அளிக்கப்பட்ட 77 பக்கம் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது, இந்திய வழக்கறிஞர்கள் அனைவரும் இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் -1961 மற்றும் இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த சட்டப்படி இந்தியர்களைத் தவிர வெளிநாட்டு சட்ட நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்களோ தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாது.இந்திய வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி தங்கள் பெயர்களை பதிவு செய்யாத வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்தியாவுக்கு வந்து சட்ட ஆலோசனைகள் வழங்கலாம்.
சர்வதேச வழக்குகள், நாட்டு பிரச்சனைகள், வெளிநாட்டு விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் வெளிநாட்டு வழக்கறிஞர்களும், நிறுவனங்களும் ஆலோசனை வழங்கலாம். மேலும் நாட்டு பிரச்சனைகள் தொடர்பான தீர்வுக்காக மத்தியஸ்தம், சமரசம் ஆகியவற்றில் ஆஜராகலாம். ஆனால் வழக்கை தடுக்க முடியாது.சர்வதேச வர்த்தக சமரச வழக்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்த தடை இல்லை. ஆனால் பி.பி.ஓ. மூலம் சட்ட சேவைகள் நடத்த அனுமதி இல்லை. இச்சட்டத்தை மீறி சட்ட சேவைகள் நடத்துவது தெரிய வந்ததால் இந்திய பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நாள்...
- அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த தினம்(1732)
- சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவல் பிறந்த தினம்(1857)
- ஸ்பெயின், புளோரிடாவை அமெரிக்காவிற்கு விற்றது(1819)
- வாஷிங்டன் பல்கலைக்கழகம், எலியட் செமினரி என்ற பெயரில் துவங்கப்பட்டது(1853)
- எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன(1958)
21 February, 2012
இதே நாள்...
- உலக தாய்மொழி தினம்
- இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்த தினம்(1878)
- புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
- நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
- வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது(1952)
கோவை கமிஷனர் நகர்வலம்
கோவை மாநகர போலிஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர் ஒருவரையும், பாதுகாப்புக்காக காவலர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு கோவை நகரில் காவல் துறையினரின் இரவு நேரத்தில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த சென்றுள்ளார்.கமிஷனர் வழக்கமாக பயன்படுத்தும் அரசு காரை எடுக்காமல், தனது நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு நகர்வலம் சென்றுள்ளார். இரவு இரண்டு மணிக்கு, சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது, காவல் நிலையத்தின் வாயிலில் துப்பாக்கியுடன் பணியில் இருக்கவேண்டிய காவலர் பணியில் இல்லை.
உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டிபார்த்துள்ளார் கமிஷனர். உதவி ஆய்வாளரின் அறையில் இருந்த ஒரு உதவி ஆய்வாளர் எதையோ எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.சாதாரண உடையில் கமிஷனர் உள்ளே வருவதை கவனித்துவிட்ட அந்த எஸ்.ஐ, போலிசுக்கே உரித்தான திமிரான பேச்சில் என்னய்யா...? என்று தலையை உயர்த்தி பார்த்தபடி கேட்டுவிட்டு தனது வேலையை கவனிக்க தொடங்கிவிட்டார். தன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை உறுதிப்படுத்திய கமிஷனர் ஒரு சாதாரண குடிமகனைப்போல பேசியுள்ளார். அய்யா நான் காளப்பட்டி பிரிவு கிட்ட வந்துகிட்டு இருந்தப்ப... நாலு ரவுடி பசங்க ஒண்ணா வந்து என்கிட்ட இருந்த பணத்தை புடுங்க வந்தாங்க நான் தப்பிச்சி ஒடியாந்துட்டேனுங்க... என்று சொல்லியுள்ளார்.
அப்படியா...? காளப்பட்டி பிரிவு கோவில்பாளையம் போலிஸ் ஸ்டேசனுக்கு சம்மந்தப்பட்ட எல்லை, அதனால் நீ அங்க போயி கம்பளைன்ட் குடு, நான் வாங்க முடியாது என்று சொல்லியுள்ளார்.அந்த நேரத்தில், கையில் இரத்தத்துடன் வந்த ஒருவர், நான் வேலை செய்யற கம்பெனியில எனக்கு சம்பளம் ஒழுங்கா குடுக்கறதில்லையிங்க. அதுனால வெறுத்துப்போன நான் என்னுடைய கையை நானே அருத்துகிட்டேனுங்க என்று சொல்லியுள்ளார்.அப்படியா... இதுக்கெல்லாம் இங்க வரக்கூடாது, நேரா ஆஸ்பத்திரிக்குதான் போகணும்... உன்னுடைய செல்போன் நம்பர இங்க குடுத்துட்டு, நேரா நீ ஜி.ஹச் சுல போய் அட்மிட் ஆகிக்கோ... நான் காலையில போலீச அங்கே அனுப்பறேன் என்று சொல்லிவிட்டு தனது எழுத்து வேலையை பார்த்து கொண்டிருந்திருக்கிறார்.எந்த கம்பெனியிலே நீங்க வேலைபார்க்கிறீர்கள்... என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கையில் ரத்தத்துடன் வந்தவரிடம் கமிஷனர் விசாரித்துள்ளார்.
யோவ்... உங்கள கோவில்பாளையம் ஸ்டேசனுக்கு போங்கன்னு சொல்லி எவ்வளவு நேரம் ஆகுது. இன்னும் இங்கே ஏன் நிக்கறீங்க... போங்க... போங்க... என்று விரட்டிக்கொண்டே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்துள்ளார் அந்த எஸ்.ஐ.சரியா... நாங்க கோவில்பாளையம் போறோம்... என்று சொல்லிவிட்டு கமிஷனர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்துள்ளார். பின்னாலேயே வந்த எஸ்.ஐ போர்டிகோவில் நின்ற கமிஷனர் வந்த காரை பார்த்துவிட்டு, இது என்னய்யா “கெஸ்ட் ஹவுசா” இங்கேயே கொண்டாந்து கார நிருத்தியிருக்கீங்க... போலிஸ் ஸ்டேசனுக்கு எப்படி வரணுமுன்னு தெரியாதா..? இப்படியா தோரணையா கொண்டாந்து கார நிருத்துவீங்க... என்று கமிஷனருக்கு அர்ச்சனை செய்துள்ளார் எஸ்.ஐ.
பணத்த புடுங்கற்றதுக்காக திருடனுக தொரத்துனதால பயத்துல இப்படி உள்ளே வந்துட்டேன்... தப்பா நெனைக்காதீங்க என்று எஸ்.ஐயை சமாதானப்படுதிவிட்டு வெளியே போனதும், சரவணம்பட்டி காவல் நிலையத்தை “மைக்”கில் கூப்பிட்டு, வாசல்லே நிறுத்தவேண்டிய “சென்றி”யை ஒழுங்க நிறுத்தி இருந்தா எதுக்கப்பா காரெல்லாம் போலிஸ் ஸ்டேக்குள்ள வருது..? இன்னைக்கு நைட் டியூட்டி பார்க்கவேண்டிய சென்றி யார்...? ஏன் அவர் வேலைக்கு வரலையா...? என்று கேட்ட பின்னர்தான் கொஞ்ச நேரம் முன்பு வந்தது கமிஷனர் என்று தெரிந்துகொண்டார் எஸ்.ஐ.அடுத்து, திருச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஒண்டிப்புதூர் சோதனை சாவடிக்கு சென்றுள்ளார் போலிஸ் கமிஷனர். அங்கும் வெளியில் இருந்துகொண்டு வாகனங்களை கண்காணிக்க வேண்டிய போலீசார் யாரையும் காணவில்லை.
திறந்திருந்த அறையை எட்டிபார்த்துள்ளார் கமிசான்ர். அங்கே ஒரு எஸ்.ஐ பாதி தூக்கத்தில் இருந்துள்ளார். ஸார்.. ஸார் என்று கமிஷனர் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பியுள்ளார்.வெளியில் உட்கார்ந்தால் யாராவது வந்து தொல்லை செய்வார்கள் என்ற காரணத்தால், அறைக்கு உள்ளே சென்று தூங்கியவருக்கு கமிஷனரை பார்த்ததும் பயங்கர கடுப்பாகிவிட்டது.என்னய்யா...? தொறந்த வீட்டுக்குள்ளே நாய் பூந்த மாதிரி உள்ளே வந்துட்டீங்க... போங்கையா வெளியே என்று கத்தியுள்ளார். அமைதியாக நின்ற கமிஷனர். அங்கிருந்த வாக்கி-டாக்கியை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசியுள்ளார். அபோதுதான் வந்துள்ளது கோவை மாநகர போலிஸ் கமிஷனர் என்று அந்த எஸ்.ஐ.க்கு தெரிதுள்ளது. மரியாதையில்லாமல் பேசிய எஸ்.ஐகள் இருவரையும் நேரில் அழைத்து இனிமேல் இப்படி பொதுமக்களை மரியாதையில்லாமல் பேசக்கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பியுள்ளார் கோவை மாநகர போலிஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி
இனிய தாய்மொழி தின வாழ்த்துக்கள்.
தமிழ் மொழிக்கும் இத்தகைய சவால்கள் சூழ்ந்து இருப்பதால் , தமிழர்கள் மொழி உணர்வுடன் , தாயின் பால் கொண்ட பற்றினை வெளிப்படுத்துவது போல் தமிழ் மொழியின் மேலும் பற்றுதல் கொண்டு நமக்கு விடப்படும் சவால்களை முறியடித்து தமிழ் மொழியை சிறப்பாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும்.
20 February, 2012
இதே நாள்...
- சர்வதேச சமூகநீதி தினம்
- அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
- ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)
- தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)
உண்மைகாதல் அழிவில்லை...
பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது. பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார்.
70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சரிந்தார். அவரை உறவினர்கள் எழுப்ப முயன்ற போது வரதம்மாள் இறந்தது தெரியவந்தது. துரைசாமி பிணத்தின் அருகிலேயே வரதம்மாள் பிணத்தை வைத்து பெரிய மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர். அவர்கள் சிதைக்கு மகன் ஜெயராமன் தீ மூட்டினார்.
Subscribe to:
Posts (Atom)


























